Headlines

றோ அதிகாரி கைது




இந்தியப் கடற்படையில் கடமைபுரியும்  இந்திய புலனாய்வுதுறை அதிகாரியொருவரை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது.

டான் செய்தி சேவையின் தகவல்களின்படி பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட றோ அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக  இஸ்லாமாபாத் நகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பலூசிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுடன்; தொடர்புபட்டிருப்பதுடன் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுவுடன் இந்த உளவாளிக்குத் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த உளவாளி, கராச்சியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட றோ உளவாளி, குல் புஸான் யாதவ் என்று இனங்காணப்பட்டுள்ளார். அவர், இந்திய கடற்படைத் தளபதியாவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கராச்சி மற்றும் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை, விசாரனைகளின்போது அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மும்பையில் வசிக்கின்ற ஹுசைன் முபாரக் பட்டேல் என்ற பெயர் அச்சிடப்பட்ட கடவுச்சீட்டினை, றோ அதிகாரி கொண்டுள்ளார்.

இந்திய உளவாளி, தென்பகுதியில் கைது செய்யப்பட்டதை, பலூசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்ப்ராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்கைதானது, பலூசிஸ்தான் மீது இந்தியா மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதாரப்படுத்தியுள்ளதாக, பலூசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்ப்ராஸ் கூறினார்.

கடந்தாண்டு முதலமைச்சர், NDS மற்றும்  RAW பிரிவுகள், பலூசிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு அனுசரணையளிப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாகிஸ்தானிய அரசாங்கம்  RAW இன் நடவடிக்கைகள் குறித்து, கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகர் கௌதம் பாம்வாலே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் அழைக்கப்பட்டு, கராச்சி மற்றும் பலூசிஸ்தானில் இந்தியத் தலையீடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *