Headlines

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கடிதம் கொண்டு வந்த புறாக்கள்




அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன.

பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப கல்லூரியில், கடிதப் பரிமாற்றத்திற்கு பறவைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலான நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் மாணவியருக்கு பறவைகளை கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

12 பறவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

பாடசாலை அதிபரும் மாணவர்களும் பேப்பரில் இரகசியமான விடயமொன்றை எழுதி பறவைகளின் கால்களில் கட்டி அவற்றை பறக்க விட்டுள்ளனர்.

இந்த தகவல்களை பார்ப்பதற்காக அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏற்கனவே கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கல்லூரியில் நேற்று காலை 8.26க்கு புறப்பட்ட பறவைகள் முற்பகல் 10.45 அளவில் கொழும்பு வத்தளை ஹெந்தலை சந்திப் பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளன.

பாடசாலை மாணவர்களும் அதிபரும் அனுப்பி வைத்த கடிதம் கிடைத்தது என கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட நபர் தொலைபேசி மூலம் அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த லெனரோல் என்பவரின் பறவைகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன.

பறவைகளின் நினைவாற்றலையும் பண்டையக் கடிதப் பரிமாற்று முறைகளை நினைவு படுத்தவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக லெனரோல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமாதானத்தை வலியுறுத்தி வடக்கிலிருந்து புறா ஒன்றின் மூலம் தெற்கிற்கு சமாதான செய்தி ஒன்றை அனுப்பி வைக்க எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *