Headlines

மீன்பிடி உபகரணங்களுக்கான நிதியை பெற்றுத் தருமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், பிரதிஅமைச்சரிடம் வேண்டுகோள்!




 -ஊடகப்பிரிவு-

கற்பிட்டி பிரதேச மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் கோரிக்கை விடுத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (18) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, புத்தளம் மாவட்டத்தின்  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், கட்சியின் தலைவர் மற்றும் பிராந்திய அமைப்பாளரின் ஊடாக, கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியிடம் கற்பிட்டி பிரதேச கடற்தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மீன்பிடி உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி, இது தொடர்பில் தாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *