Headlines

‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!




-முர்ஷித்-

சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும். ஆனால் இப்போது 09 நிலையங்களே பதியப்பட்டுள்ளன. பதியப்பட்டுள்ள அனைத்தும் சிறப்புற இயங்குகின்றனவா? என்றால் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.

சனசமூக நிலையங்கள் வினைத்திறனாக இயங்குவதற்கான பூரண ஒத்துழைப்பினை பிரதேச சபை செய்துவருகின்றது. இனியும் செய்யும். சனசமூக நிலையங்களை நடாத்தும் நீங்கள், சமூக பிரதேச அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு எதிர்காலங்களிலும் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்வரும் காலங்களில் கூடுதலான அபிவிருத்திப் பணிகள், சனசமூக நிலையங்கள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தத்தம் பிரதேச அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு சனசமூக நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

பதியப்பட்டுள்ள சனசமூ நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதோடு, அவை சிறப்புற இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் அனைவரும்  இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நிந்தவூரில் பதியப்பட்ட அனைத்து சனசமூக நிலைய நிர்வாகிகள்,  மற்றும் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பீ.மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *