Headlines

“வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!




-ஊடகப்பிரிவு-

வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி,  இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில்,  இன்று வியாழக்கிழமை
(05) கைத்தொழில் வர்த்தக  அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை முன் வைத்தார்.

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்தீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரூபானந்தா, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எப்.எம்.றமீஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப  விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற போதும்,விண்ணப்பிப்பவர்களின் தகுதி தொடர்பில் போதுமானதாக இல்லாமை நியமனங்கள் வழங்கு முடியாத நிலைக்கு இட்டுச் செல்வதாக முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.

இருந்த போதும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன் வைக்கப்பட்ட தமிழ் மொழி ஆசிரிய நியமனங்கள் தொடர்பில்,  மாகாண அமைச்சரவையில் விசேட அங்கீகாரம் பெறப்பட்டு, அதிகூடிய கல்வி தகைமையின் அடிப்படையில் துரிதமாக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில், கவனத்தை செலுத்தவுள்ளதாகவும் வடமேல் மாகாண முதலைமச்சர் இதன் போது கூறினார்.

அத்துடன், வடமேல் மாகாணத்திற்குட்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சின் கீழ் நடை முறைப்படுத்தக் கூடிய செயற்திட்டங்களுக்கு முழுமையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும், முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *