Headlines

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!





-ஊடகப்பிரிவு-

கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம், மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

இவ்வாசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்துக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாலமுனையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். அன்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை  (20) இடம்பெற்றது.

இதன்போதே, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதிகாலையிலேயே பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதன் காரணத்தால், காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவங்களும் இடம்பெற்றதுண்டு. இவ்வாறு, தமது உயிர்களை பணயம் வைத்துச் செல்கின்றனர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள், தங்களது பாலூட்டும் சிறு குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலைக்கும் உள்ளாகின்றனர்.
மேலும், பாடசாலைக்கு 7.30மணிக்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதித்துச் சென்றாலும் கூட, அரைநாள் விடுமுறையாக அந்நாள் கணிக்கப்படுகின்றது. குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில் ஜூம்ஆ தொழுகைக்காக வந்து சேரமுடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

மாணவர்களின் கல்வி நிலையைக் கவனத்தில் கொண்டும், வெளியூர் ஆசிரியர்களின் மன உளைச்சலையும் தவிர்த்து, அவர்களது சேவையைத் திறம்படத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு, மேற்படி கைவிரல் அடையாள இயந்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.
அவ்வாறு கைவிரல் அடையாள இயந்திரத்தை இரத்துச் செய்ய முடியாதவிடத்து, பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை, 20 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் இடமாற்றம் வழங்கவேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *