Headlines

அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி




முஹர்ரம் – இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஹர்ரம் மாதம் ஆரம்ப மாதமாகவும், சிறப்பான மாதமாகவும் கருதப்பட்டு, கொண்டாடப்படுகின்றது. பெருமானார் நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஹிஜ்ரி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது நோக்கப்படுவதால், அல்லாஹ்விடத்திலும் புனித மாதமாக முஹர்ரம் கருதப்படுகின்றது.

எமது இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில், ஹிஜ்ரத் பயணம் பாரிய திருப்பங்களையும், பல்வேறு படிப்பினைகளையும் ஏற்படுத்தியதை நாங்கள் மறந்து வாழ முடியாது. பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து, இந்தக் கஷ்டமான பயணத்தை தனது தோழர்களுடன் இணைந்து மேற்கொண்டார். இறுதியில் பாரிய வெற்றிகளையும் கண்டார்.

தியாகங்கள் மூலம்தான் வெற்றிகள் கிடைக்கும் என்பதை இந்த ஹிஜ்ரத் பயணம் நமக்குப் படிப்பினையாகத் தருகின்றது. இஸ்லாமிய உலகில் “முஹர்ரம் மாதம்” புனித மாதமாக இன்று கொண்டாடப்படுகின்றது. இலங்கை வாழ் முஸ்லிம்களும் இன்று இதனை கொண்டாடுகின்றனர்.

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் இவ்வாறான ஒரு கஷ்டமான பயணத்தை மேற்கொண்டு, பல்வேறு துன்பங்களையும் சந்தித்தமையை நாம் நினைவுபடுத்துகின்றோம். எனினும், அவர்களின் வாழ்க்கையிலே மீண்டும் நிம்மதி ஏற்படுவதற்கான காலங்கள் கனிந்து வருவதால், அவர்களின் வெற்றிக்காகவும் இந்த முஹர்ரம் மாதத்தில், நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென, நான் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

நமக்கிடையே ஏற்பட்டிருக்கும் பல்வேறு முரண்பாடுகளைக் களைந்து இஸ்லாமிய அடிப்படையில் நாம் வாழ்வதற்கு, இந்தப் புனித மாதம் வழிவகுக்க வேண்டுமென நான் இத்தருணத்தில் பிரார்த்திக்கின்றேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *