Headlines

சம நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்




25 நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே விதமாக அபிவிருத்தியை முன்னெடுப்பது  அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தேசிய அபிவிருத்தியின் முக்கியத:துவத்தை இனங்கண்டு சமநிலையான அபிவிருத்தி நாட்டில் ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்கும் வருடமாக அடுத்த வருடம் பிரகடனப்படுத்தப்படும்; என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் கடந்த வருடம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. அதன் பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை விரிவுப்படுத்தி பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாடு பெற்றுக்கொள்வதற்கு இந்த வருடத்தில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டின் நிதியை செலவிடும் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய  ஜனாதிபதி எதிர்வரும் மாதங்களில் இந்த நிதியை உரிய முறையில் செலவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
வறுமையில் இருந்து நாட்டை விடுவிக்கும் வருடமாக அடுத்த வருடம் பிரகடனப்படுத்தப்படும். இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்  அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து விரிவான வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த நோக்கத்தை அடைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும. வறுமையை ஒழிக்கும் சமுர்த்தித் திட்டமும், வாழ்வின் எழுச்சித் திட்டமும் முக்கியமானதாக  கருதப்பட்ட போதிலும் இந்த திட்டங்களில் உள் வாங்கப்படாது வறுமையால் வாடும் பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் உண்டு. அரச மற்றும் தனியார் துறைகளில் சாதாரண தரத்தில் சேவை புரிவதால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளவர்களின் நலனுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டின் அபிவிருத்தி தற்போதைய அரசியல் நிலைமைகளுடன் இணைந்து காணப்படுகின்றது. தேசிய அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை இனங்கண்டு செயற்படாததால் கடந்த காலத்தில் அபிவிருத்தியில் ஏற்பட்ட பின்னடைவுகள் மிகவும் அதிகமாகுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *