Headlines

மட்டு மாவட்ட செயலகத்தில் ஐ.நா அலுவலகம்!




அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இணைச் செயற்பாடுகள், கொள்கைகளுக்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அலுவலகம் நேற்று புதன்கிழமை(11) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளும், பங்காளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட களத் திட்ட நிபுணர் கே.பார்த்தீபன், திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சுபாஸ்கரன் ஆகியோர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், நல்லாட்சி தொடர்பான செயற்திட்டங்கள், கொள்கை மாற்றங்கள், அனர்த்த முகாமைத்துவச் செயற்திட்டங்கள் எனப் பல்வேறு செயற்திட்டங்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திலும் நல்லாட்சி மேம்பாடு, உள்ளுர் பொருளாதார அபிவிருத்தி சார் திட்டங்கள் ஐக்கியநாடுகள் அபிவிருத்திட்ட திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் செயற்பாடுகள், சேவைகளை மாவட்ட செயலக வளாகத்திலுள்ள அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *