Headlines

நமது சமூகம் உயர்வான நிலையை அடைய, கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்




கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அ.இ.ம.க வின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற குருநாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலை மாணவன் முஹம்மத் அகீல் மற்றும் முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z புள்ளியையும் பெற்று சாதனை படைத்துள்ள கலைப்பிரிவு மாணவி றிஸ்வினா பேகம் ஆகியோருக்கு தனது விசேட வாழ்த்துக்களையும, மகிழ்ச்சிகழையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் அதேபோன்று, தேசிய மட்டத்தில், நாடளாவிய ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2 வது இடத்தை பெற்ற, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான பிரிவு மாணவன் முஹம்மத் முன்சிபுக்கும் மற்றும் நாடளாவிய ரீதியில் கலைப் பிரிவில் 3 ம் இடத்தைப் பெற்றுள்ள மாணவி அம்றா இஸ்மாயிலுக்கும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ள மன்னார் மாவாட்டத்தைச் சேர்ந்த அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவருக்கும் அமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இதே போன்று வன்னி மாவட்டத்திலும், புத்தளத்திலும் கல்வி கற்ற பல மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கஸ்டங்களுக்கு மத்தியில் கற்பித்து ஆளாக்கிய ஆசிரியர்களையும், அவர்களுக்கு வழி காட்டிய பெற்றோர்களையும் நான் இந்த சந்தர்பத்தில் பாராட்டுவதோடு அவர்களின் மகிழ்ச்சியிலும் இணைந்துகொள்கின்றேன்.
கடந்த 25 வருடங்களாக வன்னி மாவட்ட மாணவர்கள் அகதி முகாம்களில் காலத்தைக் கடத்தியதால் கல்வியிலே மிகவும் பின்தள்ளப்பட்டிருந்தார்கள். எனினும் கல்வியிலே அவர்கள் கொண்ட கரிசனையால் ஏனையோர்களுடன் ஓரளவு போட்டிபோட முடிந்தது.
இன்று வெளிவந்த பெறுபேறுகளில் தாம் எதிர்பார்த்த புள்ளிகளை பெற்றுக்கொள்ளத் தவறிய மாணவர்கள் மனம் தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் தொடர்ந்தும் கல்வியைக் கற்று, நல்ல பெறுபேறுகளைப் பெற்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப்பெற வேண்டும் என பிராத்திக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *