Headlines

உங்களுக்கே வெற்றி கிடைக்கும்! ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம் மைத்திரி




பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும் எதிர்பார்க்கின்றேன்.

ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை இந்தத் தேர்தலிலும் பெற்றுத் தாருங்கள்” – என்று இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கூறினார்.

கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறுகையில்,
“மஹிந்தவை இனிமேல் விற்கமுடியாது. அதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தற்போது கொண்டுவந்துள்ளனர். அவரின் புகைப்படத்தைப் பயனப்டுத்துகின்றனர். மைத்திரியின் யுகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிவருகின்றனர். அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்துள்ளனர் என்பது இதிலிருந்தே தெரிகின்றது.
தாஜுதீன் கொலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மூவர்தான் இந்தக் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரை எப்படிக் கொன்றோம் என்று இவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
ரகர் வீரரை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் ஏன் கொலைசெய்ய வேண்டும். அவர்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. தாஜுதீனைக் கொலை செய்வதற்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷவின் வாகனம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில்தான் கொலைசெய்ய கொண்டு செல்லப்பட்டுள்ளார். கொலைசெய்தது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர்தான். அதனால்தான் ஜனாதிபதியின் குடும்பம் நேரடியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இரண்டாவது, எக்னெலிகொட கொலை. இதற்கு இராணுச் சிப்பாய் ஒருவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளி ஒருவரும்தான் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக் கலாசாரத்துக்குப் புலிகளைத்தான் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டால் புலிகள் என்கின்றனர். புலிகள் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்.
தம்மீதுள்ள குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கவே மீண்டும் அதிகாரத்திற்கு வர மஹிந்த முயற்சிக்கின்றார். இந்நிலையில், 18ஆம் திகதியின் பின்னர் மஹிந்த ஆட்சி தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும். மூடிக் கிடக்கும் கோவைகள் (பைல்கள்) திறக்கப்படும்” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *