Headlines

வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் -பிரதமர்




இலங்கையில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த வெற்றியோடு வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

வவுனியா வைரவப் புளியங்குளம் யங்ஸ் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற ஜக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதமர் தமதுரையில் கூறியதாவது –

இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி நீங்கள் அளிக்கின்ற வாக்கின் மூலம் அவற்றை அடைந்து கொள்ள முடியும்.

100 நாட்கள் வேலைத் திட்டத்துக்குள் எதனை சாதித்தார்கள் என்று எம்மைப் பார்த்து கேட்கின்றனர்.நாம் அவர்களுக்கு சொல்கின்றோம்.
இந்த நாட்டு மக்கள் எதனை எதித்பார்த்தார்களோ,அதனை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று,

இந்த பகுதியின் பாதுகாப்புக்காக பணியாற்றிய ஊர்காவற்படையினரை நிரந்தர சேவையில் அமர்த்துங்கள் என்று அன்று அரசிடம் கேட்ட போது,அதனை செய்ய முடியாது என்று கூறியவர்கள் ,இந்த நாட்டில் அழிவை ஏற்படுத்துவதற்கு துணைபோன கே.பிக்கு பதவி வழங்கியமை தொடர்பில் நீங்கள் அறிந்த கொள்ள வேண்டும்.

10 வருடங்களுக்கு மேல் காணிகளில் பர்மிட் இன்றி இருப்பவர்களுக்கு அவர்களது காணிக்கான உறுதியினை வழங்கவுள்ளோம்.அத்தோடு விவசாயிகளின் நலன் பல்வேறு மானியத்திட்டங்களை நடை முறைப்படுத்தவுள்ளோம்.

13ஆயிரம் குடும்பங்கள் வீடின்றி இருப்பதாஅறிய முடிகின்றது.இவர்களுக்கு இரு வருடங்களுக்குள் வீடமைப்பு திட்டங்களை நடை முறைப்படுத்தவுள்ளோம்.
அதே போல் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கவுள்ளோம்.

வடமாகாணத்தில் விவசாய அதிகார சபை ஒன்றை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதுடன்,குடிநீர் பிரச்சினையினை தீர்த்து வைப்பேன்.

இந்த மாவட்டத்தில் இன்று காணப்படுகின்ற அபிவிருத்திகளை கொண்டுவந்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஆற்றியுள்ள பணிகளை என்னைவிட நீங்கள் நன்கு அறிவீர்கள் என்றும் பிரதமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *