Headlines

இம்முறை ஏறாவூரில் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் -அமீர் அலி




ஏ.எச்.ஏ.ஹுஸைன்

எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தி கல்வி வலயத்திலுள்ள அமீரலி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டி, திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ், அவசரமான ஒரு தேர்தல் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றபோது, அது மாவட்ட ரீதியில் முஸ்லிம்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன், மலையகத் தமிழர்களும் தொகுவாரி தேர்தல் முறைமையின் பாதிப்புக்களை சந்திப்பார்கள். முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் தமது அரசியல் பிரதிநிதித்துவங்களை இழக்கவேண்டிவரும்.

அப்போது, அந்தச் சமூகங்களின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலி;க்க வாய்ப்பில்லாமல் போகும். இந்த விடயத்தில் பாதிக்கப்படப்போகின்ற சிறுபான்மைச் சமூகங்கள் விழிப்பாகவிருந்து செயற்படவேண்டிய தேவைப்பாடு உண்டு. அவசரமாக ஒரு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகின்றது. ஆனால், அப்படி ஒரு அவசர தேர்தலுக்கு செல்லவேண்டியதில்லை.

தொகுதிவாரி மாற்றத்தின் பின்னரே தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதில் ஜாதிக ஹெல உறுமய உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் விரும்புகின்றன. இந்தப் போட்டியில் ரணில் விக்கிரமசிங்க வெல்லப்போகின்றாரா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா வெல்லப்போகின்றாரா என்கின்ற நிலை எதிர்வரும் நாட்களில் எங்களுக்கு தெரியவரும். எது எவ்வாறாக இருந்தாலும், அவசரமான தொகுதிவாரியான தேர்தலொன்றுக்கு நாங்கள் முகங்கொடுப்போமாக இருந்தால், முஸ்லிம் சமூகம் இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளாக இருந்தாலும் மிகுந்த சமூகப் பொறுப்போடு நடக்கவேண்டிய தேவை உள்ளது. சமூகம் பாதிக்கின்ற அளவுக்கோ அல்லது சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைகின்ற அளவுக்கோ வழிவகுத்துவிடக்கூடாது என்பதில் தற்போதைய சமூக அரசியல் தலைவர்;கள் உறுதியாக இருக்கவேண்டும்.

எதிர்வரும் நாட்கள் அரசியலில் மீண்டும் சூடு பிடிக்கக்கூடியதும் பெறுமதியானதுமான நாட்களாகும். இம்முறை ஏறாவூரிலும் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்;’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *