Headlines

மகள் அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்: சிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற பெண்ணின் தாயார் …




சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

‘அறியாமல் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள எனது மகளை மன்னித்து விடுதலை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்று அந்த யுவதியின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சக நண்பர்களுடன் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த 28 வயது யுவதி, மூன்று வாரங்களுக்கு முன்னர் கைதானார். அவரை தம்புள்ளை நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதாக அவரது தாயார் சின்னத்தம்பி தவமணி பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவரும் தவமணிக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ள குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான உதயசிறியே தாயாரை பராமரித்துவந்துள்ளார்.

‘ஒரு கண் பார்வையில்லாமல், பல்வேறு தொழில்களையும் செய்து இந்த 6 பிள்ளைகளையும் வளர்த்துவந்தேன்’ என்று தனது கஷ்டத்தை பகிர்ந்துகொண்டார் தவமணி. தனது மகளை விடுதலை செய்வதற்காக யாரேனும் உதவ முன்வரவேண்டும் என்றும் 61 வயதான தவமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறையில் உள்ள உதயசிறியை சென்று பார்ப்பதிலும் மொழிப் பிரச்சனைகளும் பணச் சிக்கல்களும் இருப்பதாகவும் தவமணி மேலும் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குகை யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *