Headlines

கத்தாரில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இருவர் மாயம்




 நேபாள வம்சாவளி பிரிட்டிஷ் நாட்டவர்களான கிருஷ்ணா உபாத்யாயா(52), குன்டேவ் கிமிரே(36) ஆகியோர் கத்தாரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய்ச்சி செய்துவந்தனர். நார்வேயைத் தலைமையகமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான குளோபல் நெட்வொர்க் நிறுவனத்திற்காக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவர்கள் அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.வரும் 2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்த உள்ளதால் அங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவு வேலை வாங்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த ஆய்வு அங்கு நடைபெற்றது. உபாத்யாயா ஒரு ஆய்வாளராகவும், கிமிரே ஒரு புகைப்பட நிபுணராகவும் அங்கு சென்றுள்ளனர்.பணி முடிந்து இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர் திரும்புவதாக இருந்தது. இதற்காக உபாத்யாயா தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையினையும் காலி செய்துள்ளார். ஆனால் நார்வேக்கான விமானத்தை அவர் பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.கடந்த சனிக்கிழமை அன்று இவர் தாங்கள் இருவரும் காவல்துறையினரால் பின்தொடரப்படுவதாகத் தகவல் ஒன்றை தனது நண்பருக்கு அனுப்பியிருந்தார். இவர்கள் குடும்பத்தினருக்கோ, தங்களுக்கோ அதன்பின்னர் எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறும் ஆய்வு நிறுவனம் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதியது.இதனை உறுதிப்படுத்த கத்தார் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் அதனை மறுத்துள்ளனர். இதுகுறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *