Headlines

‘பணத்திற்காக தங்களுடைய உரிமைகளை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை’ பிரதியமைச்சர் அமீர் அலி!





-முர்ஷித் கல்குடா-

பணத்திற்காக தங்களுடைய உரிமையை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.ரி.அஸ்மியின் காரியாலயத்தை ஓட்டமாவடி, 2ஆம்  வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரத்தில் இருந்து ஏமாற்றுக்காரர்கள், குடிகாரர்கள் வரப்பார்ப்பார்கள். பணத்தை கொடுத்து வாக்குகளைப் பெற்று உங்களை ஏமாற்றி வரப்பார்ப்பார்கள். அவர்களிடத்தில் உங்களது குறைகளை பேச முடியாது.

ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் தருகின்றார்கள் என்பதற்காக உங்களுடைய அடிப்படை உரிமையை விற்பதாக இருந்தால் இதைவிட கேவலம் உலகத்தில் எதுவுமே கிடையாது.

வறுமை, கஷ்டம் எல்லோர் இடத்திலும் இருக்கின்றது. ஒருவரின் தேவையின் கஷ்டத்தின் பருமன் அதிகமாக இருக்கும். கொள்கை, ஜனநாயகம், அடிப்படையிலே உரிமை என்பவை ஒரு சமூகத்திற்கு தலைவனாக வரப்போகும் ஒருவனின் வாக்குரிமைக்கு அநியாயம் செய்வதாக இருந்தால் அது கேவலமாகும்.

நீங்கள் எங்களை ஆதரித்தீர்கள் என்றால் நாங்கள் உங்களுடைய தேவைகளை, சேவைகளை, எதிர்பார்ப்புகளை, செய்து தரவேண்டும் என்ற அமானிதத்தை தருகின்றீர்கள். அதிலே எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நீங்கள் நல்லவர்களுக்கு வாக்களித்தீர்களா என்ற கேள்வி மரணத்தின் பிற்பாடு இருக்கின்றது.

பணத்திற்காகவும், கெட்டவர்களுக்கும் வாக்களித்து விட்டு குற்றத்தோடு இருந்து கொண்டு மீண்டும் எங்களிடத்தில் வந்து இப்படி செய்து விட்டோம் என்ற அடிப்படைக் கலாச்சாரத்தை இல்லாமல் செய்து கொள்ளுங்கள் என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *