Headlines

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!




-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று –

இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள்.

தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம் தான் என்ன ஐயா அவர்களே?

#உங்களின் அரசியல் ராஜதந்திரங்கள் என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள் ஐயா அவர்களே?

கொடூர யுத்தம் முடிவடைந்து பலவருடங்கள் தாண்டி விட்டது. இன்னும் வடக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் அன்றாட தேவைகள் கூட ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை என்கின்ற நிலையில் கிழக்கு தமிழ் முஸ்லிங்கள் பற்றி அதிகமாக சிந்திப்பதன் நோக்கம் தான் என்ன ஐயா அவர்களே?

1990ம் பாசிச புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் வெறும் கையுடன் வெளியேற்றப்படட மக்கள் அகதிகளாக இன்னும் கூடாரங்களில் கொட்டில்களிலும் வாழ்கிறார்கள். அவர்களின் மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு தடுப்பது மட்டுமல்லாமல் வறண்ட மனநிலை உடையவர்களாக இனவாத சிந்தனையுள்ளவர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள்.

கேவலம் வடக்கு மாகாணசபை எல்லை பிரதேசத்து முஸ்லிங்களுக்குரிய தீர்வை முன்வைக்காத எல்லோரும் சேர்ந்து வடகிழக்கு முஸ்லிங்களுக்கு தீர்வு பெற முயற்சி செய்கிறீர்கள். இதை புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு கிழக்கு முஸ்லிங்கள் மூடர்கள் என்று நினைத்தீர்களோ?

#பிரிந்து சுயாதீனமாக இயங்கி கொண்டிருக்கும் இரு மாகாணத்தையும், இணைந்த வடகிழக்கு என்று கூறி கொண்டு அதில் முஸ்லிங்களுக்குரிய நிர்வாக அதிகார சபை கொடுப்பதற்கு தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறுகிறீர்கள். இப்படியான அதிகாரத்தை உங்களிடம் கேட்டது யாரு ஐயா?

“இதில் விசேடம் என்னவென்றால் அப்படி தருவதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லையாம்”.

#கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள், இணைந்த வடகிழக்கில் முதலமைச்சரை தருவதாக கூறுகிறார்.

#தமிழரசுக்கட்சி தலைவர் மாவை ஐயா அவர்கள், ஒரு காலமும் இல்லாதவாறு முஸ்லிங்கள் மீது அன்பையும் பாசத்தையும் மழையாக கொட்டுகிறார்.

இந்த நாட்டில் முஸ்லிங்களுக்கு என்று தனி மதம் கலாச்சார என்ற பிண்ணனி உள்ளது. முஸ்லிங்களுக்கு என்று தனி அடையாளம் இருக்கிறது. நீங்கள் பேசுவது எல்லாத்தையும் முஸ்லிங்கள் கேட்டு கொண்டு இருப்பார்கள் என்று இனியும் வீணாக கனவு காண வேண்டாம். முஸ்லிங்களை சிறு குழுக்களாக சித்தரித்த காலம் மலையேறிவிட்டது.

கிழக்கு தமிழ் முஸ்லிங்களின் விருப்பம் இல்லாமல் ஒரு நாளும் வடகிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் காங்கிரசின் தீர்மானம் முஸ்லிம் மக்களுடைய ஏகோபித்த தீர்மானம் இல்லை என்பதையும் இவ்விடத்தில் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *