Headlines

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?




-சுஐப் எம்.காசிம் –

மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார்.

அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

“வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம் நீரால் சூழப்படுவதால், தீவுக்குள் அகப்பட்டது போன்று நாம் ஆளாகி வருகின்றோம். ஆனால் இம்முறை ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு எமது பொருளாதாரத்தை முற்றிலும் நாசமாக்கிவிட்டது. பெரும்பாலான வீடுகளுக்குள் நீர் புகுந்து எமது சொத்துக்கள் அனைத்தும் பாலாகிவிட்டன. நாங்கள் இந்த 07 நாட்களும் பள்ளிவாயல் நிர்வாகத்தின் வழி காட்டலில், பரோபகாரிகளின் உதவிகளுடன் வாழ்க்கை நடத்துகின்றோம். உங்களைத் தவிர எந்த அரசியல்வாதியும் இங்கு வரவில்லை. நீங்கள் எம்மைத் தேடி வந்ததற்கு மிகவும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

நான்கு சுவர்களே எமது வீடுகளில் எஞ்சியுள்ளன. அடுப்பிலிருந்து, உடுப்பு வரை எமக்குத் தேவைப்படுகின்றது. தல்துவ, ஹட்டன், அவிஸ்ஸாவலையில் மழை பெய்தால், அந்த நீர் இங்கேதான் ஓடி வருகின்றது. களனி ஆற்றின் ஓரத்திலே நாங்கள் இருப்பதே இதற்குப் பிரதான காரணம். களனியாற்றின் வழியே எமது ஊருக்கு அண்மித்ததாக ஒரு வளைவொன்று காணப்படுகின்றது. நீர் வேகமாக வரும்போது, ஊருக்குள்ளே நீர் வருவதால் எமக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

லக்சபானவில் 80 குடும்பங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எமது ஊருக்கென்று நிரந்தரமாக நான்கு படகுகளாவது பெற்றுத்தாருங்கள்” என்று அமைச்சரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் வெள்ளம் வந்தபோது நாங்கள் பட்டபாடுகளால் எமது மக்களில் பலர், மானசீகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கும் அமைச்சர் உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இவற்றை எல்லாம் கேட்டறிந்த அமைச்சர், வள்ளங்கல் பெற்றுக்கொள்வது தொடர்பாக மீன்பிடித்துறை அமைச்சருடனும், இடர் முகாமைத்துவ அமைச்சருடனும் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், டாக்டர்.அனீஸ், மக்கள் காங்கிரசின் செயலாளர் சுபைர்டீன் ஹாஜியார், மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன், முபாரக் மொளவி உட்பட பலர் அமைச்சருடன் வருகை தந்திருந்தனர்.

m14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *