Headlines

சிரியாவுக்கு தரைப்படையை அனுப்ப முடியாது: ஒபாமா கைவிரிப்பு




சிரியாவில் ஐ.எஸ். கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரியா அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சிரியா விவகாரம் பற்றி கூறுகையில், “சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா தரைப்படையை அனுப்பாது. அப்படி அமெரிக்காவோ, இங்கிலாந்தோ தரைப்படைகளை அனுப்பினால், அது தவறு ஆகும். இன்னும் 9 மாதங்களே நான் பதவியில் உள்ள நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்தி விட முடியும் என்று கருத வில்லை” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “சிரியாவில் நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது. பதற வைக்கிற வகையில் அது அமைந்துள்ளது. அங்குள்ள பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டு விட முடியாது. அங்கு நீண்ட காலமாக நிலவி வருகிற பிரச்சினைக்கு, ராணுவம் மூலம் தீர்வு கண்டு விட முடியாது. அதே நேரத்தில் அங்கு ராக்கா போன்ற இடங்களில் ஐ.எஸ். களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ரஷியா, ஈரான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சர்வதேச சமூகம் நிர்ப்பந்தம் செய்து, பேச்சு நடத்தி தீர்வு காண வைக்க வேண்டும். ஆனால் அது சிரமமானது” எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *