Headlines

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!





-ஊடகப்பிரிவு- 

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் நோக்கி திரளும் மக்கள் கூட்டம் கடந்த காலங்களில் சமூகத்தை வழிநடத்துவதாகக் கூறிக் கொண்டு தேர்தல் காலங்களில் பணப்பெட்டிகளை பெருந்தேசியக் கட்சிகளிடமிருந்து கைமாற்றும் மோசடிக்காரர்கள் இனியும் எங்களுக்கு வேண்டாம் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டனர் என்று முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும்,  அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்குடியிருப்பில் ஜும்ஆப் பள்ளி வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று தருவோம். அவற்றுக்கு ஏற்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்போம். சமூகத்துக்குத் தேவையான அபிவிருத்தியினை மேற்கொள்வோம். பேரம் பேசும் சக்தியை தக்கவைத்துக் கொண்டு பேரினவாதிகளின் அநியாயங்களிலிருந்து இச்சமூகத்தைப் பாதுகாப்போம்’ என்ற வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் அள்ளி வழங்கிவிட்டு, கடந்த காலங்களில் அரசியல் செய்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம், எவ்விதமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களையோ, சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற எந்தவிதமான பிரச்சினைகளையோ தீர்த்து வைக்கவுமில்லை, அவற்றைத் தீர்த்துவைக்க இதய சுத்தியான எந்த முயற்சிகளையும் செய்யவில்லை.

ஆனால், தேர்தல் காலங்களில் மட்டும் பெருந்தேசியக் கட்சிகளுக்கு வாக்குச் சேகரிக்கும் முகவர்களாகவும், அதற்கு பெருந்தேசியக் கட்சிகளால் வழங்கப்படுகின்ற பணப் பெட்டிகளைப் பெற்று பிராந்தியங்களில் வாக்குச் சேகரிக்கும் பணியில் உள்ள பிரதிநிதிகளுக்கு அவற்றில் ஓர் தொகையை பட்டுவாடாச் செய்பவர்களாகவுமே இருந்து வந்தனர்.

பேரம் பேசும் சக்தியை இவ்வாறான பணப்பெட்டியை பெறுவதற்கே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அதனை கிஞ்சித்தும் பயன்படுத்தவில்லை.

இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தமையால் இவ்வாறான தரங்கெட்ட தலைமையை வெறுத்தொதுக்கி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலும் தங்கள் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ள சாரிசாரியாகவும், அலை அலையாகவும் மக்கள் முன்வருகின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *