Headlines

பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு.. அமைச்சர்  ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!





-முர்ஷிட் முஹம்மத்-

பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் இணைப்பாளர் டாக்டர். பரீட் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்தனர்.

அம்பாறை கோமாரியில் தமக்கு சொந்தமான 1957ஆம் ஆண்டு பேமிட் வழங்கப்பட்ட விவசாயக் காணிகள் வனபரிபாலனத் திணைக்களம் மற்றும் வேறுசிலரால் கையகப்படுத்தப்பட்டும், அடாத்தாக பிடிக்கப்பட்டும் இருப்பதால், இந்த விவசாய நிலங்களில் தாங்கள் பயிர் செய்ய முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினையை எத்தனையோ அரசியல்வாதிகளிடம் நாங்கள் சுட்டிக்காட்டிய போதும், அவர்களைச் சந்தித்து மகஜர்களைக் கையளித்த போதும், வாக்குறுதி தருகின்றனரே ஒழிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

ஒவ்வொரு தேர்தல்களிலும் இந்தப் பிரதேசத்துக்கு வரும்போது, மேடை பிரசாரங்களிலும் நாங்கள் சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்த போதும், தீர்த்துத் தருவதாக கூறுகின்றனரே ஒழிய இற்றைவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்தப் பிரச்சினையை நாங்கள் எடுத்துக்கூறி இருந்தோம். அமைச்சர் ரிஷாட் எமது கோரிக்கையை ஏற்று மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை எமக்குத் திருப்தியைத் தருகின்றது.

ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையை அமைச்சர் ரிஷாட் கொண்டுசென்றதன் பின்னர் ஆரோக்கியமான செயற்பாடுகள் நடந்திருப்பதாக அறிகின்றோம்.

எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமூகத்தின்மீது கட்டும் அக்கறையினால் இந்தத் தேர்தலில், அவரது கட்சிக்கு வாக்களிக்கவும், பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர்கள் கூறினர்.

நிந்தவூரின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சருமான மர்ஹூம் எம்.எம்.முஸ்தபாவின் ஆதரவாளரான இவர்கள், அவரது மறைவிற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்தவர்கள். தற்போது அந்தக் கட்சித் தலைமை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இவர்கள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *