Headlines

தேசியக் கூட்டுறவுக் கொள்கை அமைப்பது தொடர்பான பயிற்சிச் செயலமர்வு: அமைச்சர் றிஷாத் பங்கேற்பு




தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) காலை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கூட்டுறவு சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

தேசிய கூட்டுறவுக் கொள்கையை வகுப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் காலத்திலே பல்வேறு முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முற்றுப் பெறாது 2014 ஆம் ஆண்டளவில் இடை நடுவில் நிறுத்தப்பட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் கூட்டுறவுத்துறை கொண்டுவரப்பட்ட பின்னர் அத்துறையானது முன்னேற்றம் கண்டு வருகின்றது.

நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவுத்துறையை இலாபகரமானதாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்று வரும் அமைச்சர் ரிஷாட் அத்துறையை மேம்படுத்தி பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையிலும் சர்வதேசத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த வகையில் இடை நிறுத்தப்பட்ட தேசியக்கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவு சட்ட மூலம் ஆகியவற்றை மீண்டும் ஆக்குவதற்காக ஐ எல் ஓவின் உதவியுடன் நடவடிக்கைகள் அவர் மேற்கொண்டு வருகின்றார்.

அமைச்சரின் ஆலோசனையில் அமைக்கப்பட்டிருக்கும் கொள்கை வகுப்புக் குழு இது தொடர்பில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைத்திட்டங்களை கூட்டுத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதே இந்தப் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகுமென கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.

7m8a0819 7m8a0805 7m8a0773 7m8a0770

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *