Headlines

அரசியல் வியாபாரிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் தருணம் வந்துவிட்டது-  அமைச்சர் றிஷாத்




அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், அந்தக் கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பினரின் ஏற்பாட்டில், அதன் தலைவர், பொறியியலாளர் அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

எருக்கலம்பிட்டிக்கும், எனக்கும் நெருங்கிய உறவும், தொடர்பும் நீண்டகாலமாக இருக்கின்றது. இந்த மண்ணிலே அதிகமான எனது சொந்தங்கள் இருக்கின்றன. இங்குள்ள கல்லூரியிலே நான் கல்வி கற்றவன். எனினும், நான் இங்கு மேற்கொள்ளும், மேற்கொள்ளத் திட்டமிடும் அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கான முயற்சிகளிலேயே, அரசியல் கட்சிகளின் இங்குள்ள ஏஜெண்டுகள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அப்பாவி மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அந்த மக்கள் வடிக்கும் கண்ணீர் பற்றி வேதனை இல்லை. தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக, தங்களின் சுயநலத்துக்காக, தங்களது பொக்கட்டுக்களை நிரப்புவதற்காக அரசியல் வியாபாரிகளின் கூலிகளாகச் செயற்படுகின்றனர்.

16 வருடங்களாக இந்த மக்களை ஒரு மாயையில் இவர்கள் வைத்திருந்தார்கள். நம்பியிருந்த மக்களை ஏமாற்றினார்கள். தருவார்கள், தருவார்கள் என்று நீங்கள் நம்பியிருந்த போதும், உங்களுக்கு எதுவுமே அவர்கள் செய்யவில்லை. எம்மை செய்யவும் விடவில்லை.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு  நாங்கள் அடிக்கல் நாட்டப் புறப்பட்டபோது, அதற்கு முந்தைய நாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரிடம், அவரது கட்சியின் தலைவர் குருநாகலிருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கின்றார். “மைதானத்துக்கு இன்றே போய் கல்லை வையுங்கள்” என்று. எங்கோ இருந்த பிரதியமைச்சர் எருக்கலம்பிட்டிக்கு ஓடோடி வந்து, 30 இலட்சம் ரூபா தருவதாக வாக்குறுதியளித்து, கல்லையும் வைத்துவிட்டு சென்றுள்ளார். அவர் கொடுத்த வாக்கினை நிறைவேற்றினால் சரி. இந்த அபிவிருத்தியைத்தான் நாங்களும் எதிர்ப்பார்க்கின்றோம். 16 வருட காலமாகத் தூங்கிக் கிடந்தவர்களை நாங்கள் விழிப்படையச் செய்துள்ளோம்.

நாங்கள் கட்சி பார்க்க மாட்டோம். ஆள் பார்க்க மாட்டோம். அரசியல் இலாபத்துக்காக, எங்களைப் பற்றி மக்கள் மத்தியிலே தவறான எண்ணங்களையும், கருத்துக்களையும் விதைப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது. இவர்கள் அரசியல் வியாபாரிகளின் ஏஜெண்டாகத் தொழிற்பட்டு, தமது நோக்கங்களை அடைந்துகொள்ள முயற்சிப்பவர்கள்.

எனவே, இவர்களின் மாயையில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம். “எந்த ஒரு சமூகமும் தானாகத் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை, இறைவனும் மாற்றமாட்டான்” என்ற ஹதீஸை நான் உங்களுக்கு எத்திவைக்க விரும்புகின்றேன்.

இத்தனை வருடங்களாக வாக்களித்து வாக்களித்து உங்கள் கைவிரல்களும் தேய்ந்ததுதான் மிச்சம். எனினும், உங்கள் கஷ்டங்களை இல்லாமலாக்குவதற்கு உருப்படியாக எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை.

அயல் கிராமங்களான தலைமன்னார், புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களையும், முசலிப் பிரதேசத்தையும் நீங்கள் சென்று பாருங்கள். அவர்கள் எங்களைப் பயன்படுத்தினார்கள். நாங்களும் அவர்களுக்கு உதவினோம். பிரதேசவாதம், ஊர்வாதம், வட்டாரவாதம், ஊருக்குள்ளேயே கிழக்குவாடி, மேற்குவாடி என்றெல்லாம் பிரித்து தங்களது நலன்களை அடைவதற்காக முயற்சி செய்வோர்களுக்கு, இனியும் உடந்தையாக இருக்காதீர்கள். கிராமத்தின் ஒற்றுமையின் மூலமே எதையும் சாதிக்கலாம்.

எருக்கலம்பிட்டி மக்களின் உள்ளங்களில் நிறைந்து வாழும் மசூர் ஹாஜியாரின் பெயரில், பாலர் பாடசாலை ஒன்றை அமைத்துத்தர வேண்டுமென்று விடுத்த கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டு, அதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தேன். தற்போது முதற்கட்டமாக நாம் அமைத்துத் தந்த ஐம்பது வீடுகளைத் தவிர, இன்னும் ஐம்பது வீடுகளை அமைத்துத் தருவதற்கான நிதியை இந்த வருட இறுதிக்குள் வழங்குவோம். அத்துடன், கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் இந்தக் கிராமத்துக்கே நான் முன்னுரிமை வழங்கியபோதும், சதிகாரர்களின் செயற்பாடுகளால் கிடைக்க வேண்டிய 900 வீடுகள் முந்நூறாகக்   குறைந்தன.

எருக்கலம்பிட்டி கிராமத்தின் எல்லை தொடர்பாக என்மீது சிலர் வீண்பழி சுமத்துவதாக அறிய முடிந்தது. எனக்கு இந்தப் பிரச்சினை தெரியவே தெரியாது. உங்களுக்கு அவ்வாறான அநியாயங்கள் ஏதாவது நடைபெற்றிருந்தால் அதிகாரிகளையும், உங்களையும் அழைத்து அதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதில் முன்னின்று செயற்படுவேன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் எம்.பிக்களான நவவி, இஷாக், அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்வி விவகாரப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி, தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவரும், சட்டத்தரணியுமான மில்ஹான் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர்.

7m8a9967 7m8a0558 7m8a0225 7m8a0111 7m8a0068 14721571_1456298897719634_7171300723419278808_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *