Headlines

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்




ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம்.

ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்.

ஆனால் அதற்காக ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான முறையில் ஈடுபடுவோருக்கு கருணை தாட்சண்யம் காட்டமாட்டேன்.

எவன்கார்ட் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

எனவே இப் பிரச்சினை உட்பட உழல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நியாயமானதாகவும், நீதியானதாவும் இடம்பெற வேண்டும்.

அது தொடர்பான நடவடிக்கைகளையும், செயற்பாடுகளையும் பலப்படுத்துவதற்காக திங்கட்கிழமை விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளேன்.

இதன் போது இந் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கான அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குவேன்.

இன்று எவர் எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த போதும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியை உருவாக்கியுள்ளது.

இதுவே அபிவிருத்திக்கு சிறந்த அடித்தளமாகும்.

நான் தாய்லாந்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த போது அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன..

இதனை தடுக்க உள்ளக ஆலோசனை என்னவென தாய்லாந்து பிரதமர் என்னிடம் வினவினார். அதற்கு பதிலளித்த நான் ஆளும் – எதிர்கட்சி இணைந்து எமது நாட்டைப் போன்று இணக்கப்பாட்டு அரசியலை ஏற்படுத்துவதன் மூலம் அமைதிகாண முடியும் என ஆலேசனை வழங்கினேன். இதனை தாய்லாந்து பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *