Headlines

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்




என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிள்ளையான் ஆகியோர் மட்டும் இருக்க தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து திறந்த நீதிமன்ற பகுதிக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு அவரது சட்டத்தரணியால் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி உங்களை இதே மன்றில் முன்னிலைப் படுத்துவர். அப்போது நாம் வருவோம். ஒன்றும் பயப்பட தேவையில்லை. உங்கள் உறவினர்களுக்கு சனிக்கிழமை உங்களை பார்வையிடலாம். உணவும் கொண்டுவந்து தரலாம் என இதன் போது அந்த சட்டத்தரணி பிள்ளையானிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கைவிலங்கிடப்பட்ட பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வரப்பட்டார். இதன்போது மன்றின் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பிரதான வாயிலை பிள்ளையான் அடைந்த போது அங்கிருந்த புகைப்படப் பிடிப்பாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர்.

இதன்போது தனது விலங்கிடப்பட்ட கைகளை சற்று உயர்த்தி ‘ நன்றாக படம் எடுங்கள்… எடுத்துக் கொண்டு போய் ரீ.என்.ஏ.விடம் காட்டுங்கள்.. அவர்கள் மிக்க சந்தோஷப்படுவர்..’ என தெரிவித்தவாறு அவர் புலனாய்வுப் பிரிவின் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *