Headlines

ஐ.தே.க.வின் மடியில் படுத்து சு.க தாலாட்டு கேட்காது: மஹிந்த




ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு இரகசியமான முறையில் சந்தித்துவிட்டு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு கூடியிருந்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் நேற்று இரவு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு விருந்துபசார நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளதோடு, சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 87பேரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விருந்துபசார நிகழ்விலிருந்து சுமார் 9.30 மணியளவில் திடீரென புறப்பட்டுச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் பிரசன்னவின் வீட்டுக்கு வந்து விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுள்ளார். இவ்வாறு திரும்பிய மஹிந்தரிடம், சு.க எம்.பி.க்கள் வினவியபோது, ‘தான் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றதாகவும், அவர் அதன்போது தன்னிடம், பொதுத் தேர்தலில் போட்டியிடாது, சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரியதாகவும்’ கூறினார். இருப்பினும், இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதானது காலம் கடந்த விடயமாகும் என்றும் அனைத்து சக்திகளும் தன்வசம் உள்ளதால் மடிவெடுக்கும் அதிகாரத்துடன் தான் தற்போது செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். TM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *