Headlines

இராணுவ சூழ்ச்சி குறித்த அறிக்கை விரைவில்?




தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற இணக்கம் இன்று கூடிய தேசிய நிறைவேற்று சபையில் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியுற்றால் அதிகாரத்தை வழங்காதிருக்க சூழ்ச்சி செய்தமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இரகசிய பொலிஸார் விசாரணை செய்து உரியவர்களிடம் வாக்குமூலம் பெற்று ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காடியுள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற பொதுமக்கள் கொள்ளை, கடத்தல், தாக்குதல், கொலை சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தல் மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தை மாற்றுதல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் யுத்தத்தின் பின் சொத்துக்கள், வாகனங்கள், சொத்துக்கள் போன்றவற்றிக்கு என்ன நடந்ததென்பதை ஆராயவும் தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.

புதிய அரசின் நிறைவேற்று சபை இரண்டாவது முறையாக இன்று கூடியுள்ளதுடன் இதில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *