Headlines

ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?




ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

2015 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.நிபந்தனை அற்ற ஆதரவு என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.கிழக்கு மாகாண சபையில் அரசுடன் மு.கா  செய்து கொண்ட எந்த ஒரு விடயத்தையும் இது வரை காலப் பகுதியில் அரசு  நிறை வேற்றியதாக அறிய முடிய வில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் மு.கா இனது போக்கு அரசை விட்டு விலகுவதாக அமைந்துள்ளது என உறுதியாக கூற முடியாததொரு நிலையில் உள்ளது.செய்வோம் எனக் கூறியவைகளை செய்யாது தனது பயணத்தை அரசு தொடர்கின்ற போது அரசிற்கு ஜனாதிபதித் தேர்தலும் முட்டுக் கொடுக்க விளைவது அறிவுடமையல்ல.

அரசு எதிர் வரும் காலங்களிலாவது முஸ்லிம்களிற்கு சார்பாக போக்கை கடைப் பிடிக்குமா? என்பதை சற்று யூகித்துக் கொள்வதற்கு இவ் வரவு செலவுத் திட்டத்தை மு.கா பயன்படுத்தியிருக்கலாம்.இன்னுமா அரசை நம்புகிறீர்கள்?என்ற வினாவும் இங்கே எழலாம்.என்ன செய்வது? இஞ்சியைக் கொடுத்து மிளகாயை வாங்கி விடுவோமா?என்ற அச்சமும் உள்ளத்தில் நிலை கொண்டுள்ளதே!

உண்மையில் இவ் வரவு செலவுத் திட்டத்தை அரசு பாராளுமன்ற அனுமதியைப் பெற சமர்ப்பிற்க முன் இவ் வரவு செலவுத் திட்டத்தில் முஸ்லிம்களின் தேவைகளை உள் வாங்கும் பொருட்டு தற்போது அரசிற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் கட்சி என்ற வகையிலோ அல்லது இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் ஒரு  கட்சி என்ற வகையிலோ மு.கா இடம் இவ் வரவு செலவுத் திட்டம் பற்றிய அபிப்பிராயங்கள்,சேர்க்கைகள், மாற்றங்கள் போன்றவற்றை அரசு  கட்டாயம்  கோரி இருக்க வேண்டும்.

ஆனால்,அது எதனையும் அரசு செய்ததாக அறிய முடியவில்லை.இச் செயற்பாடு புலப்படுத்தி நிற்கும் மேலுமொரு உண்மை தான் அரசு இவ் வரவு செலவுத் திட்டத்தில் முஸ்லிம்களின் நலனையோ முஸ்லிம் காங்கிரசையோ ஒரு பொருட்டாகாவே கணக்கு எடுக்க வில்லை.அதே நேரம் தனது ஆற்றலைப் பயன்படுத்தி அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ள  மு.கா முயற்சித்ததாகவும் அறிய முடியவில்லை. முஸ்லிம்களின் நலனுக்காய்  மு.கா அவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள  கட்டாயம் முயற்சித்திருக்க வேண்டும்.அல்லா விட்டால் அரசுடன் மு.கா ஒட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா?

மு.கா கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் தங்களது செல்வாக்கை ஓரளவு செலுத்தி இருந்தது.இம் முறை சற்றேனும் வரவு செலவுத் திட்டத்தில் மு.கா இனால் செல்வாக்குச் செலுத்த முடியாமைக்கு மு.கா பல் துறைச் சவால்களை தற்போது எதிர் கொண்டிருப்பதால் எதை விடுவது?எதை பிடிப்பது?என நிலை தெரியாது தடுமாறுவதும் ஒரு காரணம் எனலாம்.மேலும்,பல் துறை ஆளுமையுள்ளவர்களை மு.கா உள் வாங்க தவறுகின்றமையையும் இதற்கான காரணங்களில் ஒன்றாகா முன் வைக்கலாம்.

சரி விடயத்திற்கு வருவோம்,மு.கா,முஸ்லிம்கள் இவ் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாய்  நியாயப் படி மு.கா எதிர்க்க வேண்டிய ஒரு வரவு செலவுத் திட்டமாக இது இருப்பினும்,எதிர்ப்பதால் மு.கா எதனையும்  சாதிக்கப் போவதில்லை என்பதை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.மு.கா ஆதரவு அளித்தாலும் அளிக்க விட்டாலும் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெரும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

எனவே,கொண்டதைக் கோளையாக்காமல் அரசிற்கு இவ் விடயத்தில் ஆதரவளிப்பதே மு.கா  இற்கு பொருத்தமாக  அமையும்.ஹெல உறுமய எதிர்க்கிறதே?எனக் கேட்கலாம் இதில் பல்வேறு உள் நோக்கங்களும் அமையப் பெற்று இருக்கலாம் எம் சமூகம் அறிய வேண்டும்.

இவ் ஆதரவை மு.கா ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிப்பதற்கான முதற் படியாக எடுக்கலாமா?எனக் கேட்கலாம்.உண்மையில் அவ்வாறு முதற் படியாக இதனை மு.கா பயன்படுத்த எதிரணிகளும் இதனை அவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?ஜானதிபதித் தேர்தலுக்கான ஒத்திகைப் பலப் பரீட்சை பார்க்க  இது சிறந்த தருமாக இருந்தும் எதிர்க் கட்சிகள் இதனை பயன்படுத்த தவறி விட்டன என்று தான் கூற வேண்டும்.நிலைமை,இவ்வாறிருக்க மு.கா இனது ஆதரவினை மாத்திரம் முதற் படியாக எடுப்பது நியாயமில்லை.

இவ் வரவு செலவுத் திட்டத்தை  மு.கா எதிர்க்கும் பட்சத்தில் மு.கா எதிரணி சென்று உட்கார வேண்டியத்துதான்.இன்னும் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப் பட சில மாதங்கள் உள்ளதால் சில வேளை  அரசிடமிருந்து சிலவற்றை வலுக்கட்டாயமாக உறிஞ்சிக் கொள்ளும் வாய்ப்பு மு.கா இற்கு கிடைத்து விடலாம்.பேரம் பேசிய சிலவைகள் இன்று கிடைக்குமா?நாளை கிடைக்குமா?என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதையும் ஒரு கனம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.எனவே,எதிர்த்து எதுவும் கிடைக்கப் போவதில்லை எனும் போது எதிர்க்க தருணம் வரும் வரை ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?இவ்வாறு அனுகுவது தான் அறிவுடமையுமல்லவா?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *