Headlines

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா




மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கும், சுமூக நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியால் முடியும் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாம் ஏற்கெனவே மியான்மர் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கடந்த காலங்களில் பேசியிருப்பதாகவும், அவரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இதனை தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து கூறும்போது, “இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். லண்டனிலும் செக் குடியரசு நாட்டுக்கு சென்றபோதும் இதுபற்றி சூச்சியிடம் ஆலோசித்து இருக்கிறேன். அப்போது, இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது என்றும் பர்மியர்கள் வாழும் நாட்டில், இதனை கையாளுவதில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் சூச்சி என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் இது முற்றிலும் தவறான போக்கு. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினை மனிதத்துக்கு எதிரானது. மற்றவர்களின் உயிரையும் வாழ்வையும் நாம் எண்ணிப் பார்க்காமல் சுயநலத்துடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது” என்றார் தலாய் லாமா.

மியான்மரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையிலேயே, நோபல் பரிசு பெற்றவரும், மியான்மர் ஜனநாக கட்சியின் தலைவருமான ஆங் சான் சூச்சி இந்த விவகாரத்தில் கருத்துக் கூறவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *