Headlines

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கோட்டாவுடன் –   றிஷாத் பேச்சு 




மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரணின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் – பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளருடன் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
மன்னார் – வெள்ளாங்குளம் – கணேஷபுரம் என்ற பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின் இழப்பு மாந்தை பிரதேசத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் பார்க்கின்றேன் .
முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான நகுலேஸ்வரன் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வும் பெற்று வழமையான தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மாந்தை பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினராக இருந்து – அவரது பிரதேச நலனுக்காக பல்வேறு உதவிகளை  என் மூலமாக பெற்றுச் சென்றிருக்கிறார். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அதிகமாக அவரது பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவே உரையாடுவார்.
இவ்வாறு சகஜ வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்  படுகொலை செய்யப்பட்டதானது  மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அகற்றி இக்கொலைக்கு பின்னணியிலுள்ள சதிகாரர்களைக் கண்டறிந்து உண்மையை  வெளிப்படுத்த வேண்டிய கடமை பொலிசாருக்கு உண்டு.
இது தொடர்பில் உண்மைநிலையை கண்டறிந்து பின்புலத்தையும் அறிந்து உரிய விசாரணையை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
நகுலேஸ்வரன் கொலையால் துயருற்றிருக்கும் ஆசிரியையான அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *