Headlines

பரபரப்பாகும் அரசியல் களம்- அடுத்தடுத்து பங்காளிக் கட்சிகளை சந்திக்கும் மஹிந்த




ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார்.

கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்திய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி இன்று செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சு நடத்தவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி சந்திப்பை நடத்தவுள்ளது.

அதேபோன்று தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் நாடு திரும்பியதும் அவர்களுடன் சந்திப்பை நடத்துவதற்கு ஆளும் கூட்டணி எதிர்பார்த்துள்ளது.

குறிப்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்தும் சந்திப்புக்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்பாக கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *