Headlines

பொதுபல சேனாவுக்கு ஹெல உறுமய ஆதரவு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு




இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார்ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்

இதேவேளை, பொது பல சேனாவின் விழாவொன்றில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கலந்துகொண்டிருந்தார்.
அந்த நிகழ்வில் அவர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று முஸ்லிம் அமைச்சர்கள் முன்கூட்டியே கேட்டுக்கொண்டிருந்தததாகவும் ரிசாத் கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள அமைச்சரவை உபகுழு இன்று திங்கட்கிழமை கூடியுள்ளது.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் அதாவுல்லா ஆகியோருடன் தானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் டியூ குணசேகர, அமைச்சர் திஸ்ஸ வித்தாரண ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.
பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் ஹலால் உணவு முறைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் முஸ்லிம் உலமா சபையை இழிவுபடுத்தும் விதமாக அந்த அமைப்புகள் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *