Headlines

“விளையாட்டு மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கே வழங்கவும்” வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு




தம்பதெனிய மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த குளியாப்பிடிய வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கி மைதானத்தை பாடசாலைக்கு கையளித்துள்ளார்.

மும்மன்ன பாடசாலை மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஆர்.ஆர்.ரி அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை மைதானத்தை மாணவர்களுக்கு ஒப்படைக்க இணக்கம் தெரிவித்துள்ளதோடு, பாடசாலை அதிபர்- அபிவிருத்திச் சங்கத்தினருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தம்பதெனிய பொலிஸார் மும்மன்ன பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கெதிராக குளியாபிடிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்ட பிரிவு 81ல் தாக்கல் செய்திருந்த வழக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தம்பதெனிய பொலிஸ் பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கோரியிருந்தாலும், மேற்படி விடயத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு திகதி குறித்துள்ளது.

மும்மன்ன விடயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.டி அமைப்பினர் தொடர்ந்தும் செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

-ஆதில் அலி சப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *