Headlines

உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு அடுத்த மாதம் இலங்கையில்




உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாடு “வர்த்தக தொடர்புகள், போட்டித்தன்மை, மாற்றங்கள்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்றுமதி வர்த்தக சபை குறிப்பிட்டுள்ளது.

நடைபெறவுள்ள இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் உரை நிகழ்ந்தவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் 600 பேர் வரையில் பங்கேற்பார்கள். இவர்களில் சந்தைப்படுத்தல் நிபுணர்கள், சந்தை ஆய்வாளர்கள், வர்த்தக சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன் உரையினையும் ஆற்றவுள்ளனர். சர்வதேச வர்த்தக நிலையம் மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வணிக அமைச்சுடன் இணைந்து ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஊடாக மாநாட்டை ஏற்பாடு செய்கிறது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அரஞ்சா கொன்ஸ்சாலிஸ் கலந்து கொள்வார். பொதுநலவாய செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் நவுஷாட் ஃபோப்ஸ், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குரான் கான், மாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் மகேஷ் அமலின் ஆகியோரும் உரையாற்றவுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *