Headlines

சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு




ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதால் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெருமையாக அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஒரு அரசியல் மற்றும் சமூகப் புரட்சியினூடாக புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக சட்டத்தரணிகள் வழங்கிய பங்களிப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். தம்மை சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, தம்மை சந்திக்க வரும் எந்த ஒருவருக்கும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகள் எப்பொழுதும் திறந்தேயுள்ளது எனக் குறிப்பிட்டார்.

மக்கள் எதிர்பார்த்த ஒரு ஜனாதிபதியாக தாம் எல்லோருடைய கருத்துக்களுக்கும் செவிசாய்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னால் இராஜாங்க அமைச்சர் ராஜா சமரநாயக, சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னால் தலைவர் உபுல் ஜயசூரிய, சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி வெலியமுன, சிரேஷ்ட சட்டத்தரணி காந்தி கண்ணங்கர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *