Headlines

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி




அரபு நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதம் இல்லாத மண்டலம் உருவாக்கப்படவேண்டும் என்று உலக நாடுகள் முயற்சித்துவருகின்றன.
இஸ்ரேலில் செயல்பட்டுவரும் யூத அரசு பெருமளவில் அணு சக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கருதப்படும்போது இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்த அந்த நாடு மறுத்துவருகின்றது.  சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.நா அணுசக்தி வருடாந்திர மாநாட்டில் இஸ்ரேலின் அணு ஆயுதக் குவிப்பு பற்றிய ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்திலும் சிரியா உட்பட 18 நாடுகள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிட இஸ்ரேலை வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்தினை முன்வைத்த குவைத் தூதுவர் சாதிக் மராபி மத்திய கிழக்கு பகுதியில் அணு ஆயுதங்கள் இல்லா மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் மட்டுமே தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார் இந்தத் தீர்மானத்திற்கு முன்னோடியாக ஒரு ஆதரவுத் தீர்மானத்தை எகிப்து கொண்டுவந்தபோது 13 உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மீதி அனைவருமே இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்..
ஆனால், அதனபின் நடந்த வாக்கெடுப்பில் 27 உறுப்பினர்கள் வராத நிலையில் 58- 45 என்ற வாக்கு எண்ணிக்கையில் இந்தத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இந்த முடிவினை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு அரபு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது இஸ்ரேலுக்குத் தீங்கை விளைவிப்பதாகும் என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவும் ஏற்கவில்லை. பிராந்தியக் கட்சிகளிடத்தில் நம்பிக்கை குறையும்போது ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும் என்று வாக்கெடுப்பின்போது அமெரிக்கத் தூதரான லாரா கென்னடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *