Headlines

பாரத லக்ஸ்மன் கொலை : சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு




கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வரை, கொலன்னாவையில் வைத்துச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர்கள் இருவருக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி கொலையின் பிரதான சந்தேகநபரான தெமட்டகொடை சமிந்த என்பவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமிந்த, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படும் போது, இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இருப்பினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமையும், மேற்படி கொலை வழக்கு இடம்பெற்ற போது, தெமட்டகொடை சமிந்த தவிர, ஏனைய சந்தேகநபர்களான அமில மற்றும் சம்பத் ஆகியோர், சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியிலேயே, அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *