Headlines

ஜப்பானுக்கு WHO எச்சரிக்கை




ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 70 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நுளம்பினால் பரவும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெங்குக் காய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஏனைய வியாதிகள் டோக்கியோவில் தலை தூக்கி வருவதாக உலக சுகாதாரத் தாபனமான WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.

டோக்கியோவில் கடந்த வாரம் குறைந்தது 55 பொது மக்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோயாளிகள் அனைவருக்கும் ஓர் பொது அம்சம் உள்ளது. அது என்னவெனில் டெங்குவால் பாதிக்கப் பட்ட இவர்கள் அனைவரும் டோக்கியோவின் மிகப் பெரிய வெளி இடமான யோயொகி பூங்காவுக்கு பயணம் செய்திருப்பதுடன் அங்கு மோசமான நுளம்புக் கடியால் அவதிப்பட்டதாக முறைப்பாடும் செய்திருந்தது தான் அது. இதை அடுத்து டோக்கிய நிர்வாக அரசு சுமார் 100 நுளம்புகளைக் குறித்த பூங்காவில் சிறைப் பிடித்து ஆய்வு செய்ததில் அவை டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமியைக் கொண்டிருந்தது உறுதி செய்யப் பட்டது.
எனினும் சீன அரசின் உடனடி நடவடிக்கையால் ஒரு கிழமைக்குள் டெங்குவால் பாதிக்கப் பட்ட பெரும்பாலான மக்கள் குணமடைந்து தமது இல்லத்துக்குத் திரும்பியுள்ளனர்.

டெங்குக் காய்ச்சல் ஒருவருக்கு மிகப் பெரிய அசௌகரியத்தையும் சில அரிதான வகைகளில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நோய் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்குப் புறக்காரணிகளால் பரவாத ஒன்று என்பதுடன் அயெடெஸ் அயெஜிப்டி என்ற வகை நுளம்பால் தான் மனிதர்களுக்கு இது பரவுகின்றது. டெங்குவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு முதலில் காய்ச்சல், பின்னர் தீவிரமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம், தசை, மற்றும் மூட்டுக்களில் வலியையும் ஏற்படும். உலகம் முழுதும் ஒரு வருடத்துக்குச் சுமார் 50-100 மில்லியன் பேர் டெங்குக் காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர் என WHO தெரிவிக்கின்ற போதும் ஓர் புதிய ஆய்வு இந்த அளவு WHO இனது முடிவை விட 4 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *