Headlines

பெலவத்தை சீனித் தொழிற்சாலையை மேலும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்




பெலவத்தை சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் பிரதிநிதிகளும் அந்தப் பிரதேசத்தில் கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் நேற்று (௦9) ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிசாத் பதியுதீனை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தனர்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இந்த சந்திப்பின் போது, பெலவத்தை சீனித் தொழிற்சாலை கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், இடர்பாடுகளையும், குறிப்பாக யானைகளின் தொல்லையால் கரும்புச் செய்கை பாதிப்பது தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

ஊழியர்களினதும், தொழிற்சங்க பிரதிநிதிகளினதும் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் றிசாத், இது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊழியர்களின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பெலவத்தை சீனிக் கூட்டுத்தாபனத் தலைவரையும், அமைச்சு அதிகாரிகளையும் பணித்தார்.

அத்துடன் அடுத்த வாரமளவில் வன விலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுடன், தானும் அமைச்சர் விஜிதமுனி சொய்சாவும் சந்தித்து பேச்சு நடத்தி, யனைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

சீனித் தொழிற்சாலையை மேலும் இலாபம் ஈட்டும் நிருவனமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர், ஸ்ரீலசுக, ஐதேக, சுயாதீன தொழிற்சங்கங்கள் என்ற பேதமின்றி அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை தெரிவித்தமை ஒரு சிறந்த முன்மாதிரியாகும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *