Headlines

மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் உடன்போகமாட்டார். எமது நம்பிக்கைகளுக்கு மாறாக மஹிந்தவிற்கு அவர் வேட்புமனு வழங்குவாறேயானால் 63 இலட்சம் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்தவராக வரலாற்றில் பெயர்பதிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டால் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் சாத்தியமாகுமா என்பது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் வீரகேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ தீர்மானம் எடுக்கவில்லை. இது குறித்தான உத்தியோகபூர்வ முடிவுகள் வந்ததன் பின்னரே கலந்துரையாட முடியும்.

இந்நிலையில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வரமுனைவது ஊழல் மோசடி குற்றச்சாட்டிலிருந்து தனது குடும்பத்தையும் அணியினரையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் ஆகும். எனவே இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் உடன்போகமாட்டார். எனினும் எமது நம்பிக்கைகளுக்கு எதிர் மாறாக மஹிந்தவிற்கு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்குவாறேயானால், தனக்கு வாக்களித்த 63 இலட்சம் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்தவராக வரலாற்றில் பெயர்பதிப்பார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்ப்பட்டு, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால்; புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு எம்மால் முடியாமல் போகும்.

மக்களினால் நிராகரிக்கப்பட்ட திருட்டு கும்பல்களுடன் நாம் எந்தவொரு தொடர்பையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் உடன்படாது. நாட்டு மக்களின் பணங்களை கொள்ளையிட்ட பாரியளவிலான மோசடிக்காரர்களுக்கு வேட்புமனு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முனைய கூடாது.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட திருடர்களினாலும், அடிப்படைவாத கொள்கையை கொண்ட குடும்பத்தவர்களினாலும் உருவாகும் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உடன்போகாது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து மீளவும் குடும்ப ஆட்சிக்கு வலுசேர்க்கும் வகையிலேயே செயற்படவுள்ளனர். இருந்தபோதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டாலும் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே அமர்வார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேசரிக்கு குறிப்பிட்டார். vk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *