Headlines

“பரீட்சாத்திகளின் இலக்குகள் ஈடேற பெற்றோருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பரீட்சாத்திகள் அனைவரும் தங்களது அபிலாஷைகளை அடைந்துகொள்ள இறைவன் துணைபுரியட்டும். பரீட்சை என்பது கற்றலின் அடைவுமட்டத்தை அளவிடும் பிரதான அளவுகோல் மாத்திரமே! வழிகாட்டியல்ல என்பதையும், உயர்தர மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 
நாளை (07) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
“பரீட்சாத்திகள் சகலரும் இலக்குகளை அடையப் பிரார்த்திக்கிறேன். கல்வி என்பது ஒருவனின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான பிரதான ஊன்றுகோல். மாணவர்கள் இந்த ஊன்றுகோலை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளல் வாழ்க்கைக்குப் பிரதானமாகிறது. அனுபவங்கள் ஆளுமைகளை விருத்தி செய்தாலும், கல்வியே அவனது இலட்சியத்தை கரை சேர்க்கிறது.
 
எனவே, ஒவ்வொரு எண்ணப்பாடுகளுடனும் நாளை இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், அவர்களது அபிலாஷைகளை அடைந்துகொள்ளட்டும்.”
 
இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் அடையும் ஆனந்தத்தில் தானும் பங்குகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.