Headlines

மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!





 

-ஊடகப்பிரிவு –  

வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritime Pattu), மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆகியவற்றிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்குகின்றது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலகங்களில் முறையே அந்தந்த மாவட்டங்களின் கீழான நகரசபை, பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இணைப்பாளர் முஜாஹிர், ஐதேக வின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் பஸ்மின், மக்கள் காங்கிரஸின் பிரமுகர் செல்லத்தம்பு ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி ஐ.எஸ்.எம்.மொஹிடீன், இணைப்பாளர் பாரி ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்திலும், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *