Headlines

தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு முல்லையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க ரிஷாட் நடவடிக்கை





முல்லைத்தீவில் மீள்குடியேறி, வீடில்லாமலும், காணிகள் இல்லாமலும் கஷ்டப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால், துபாய் அரசின் நிதியுதவியுடன், 120 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் தலைமையில், முல்லைத்தீவு ஹிஜ்றாபுரத்தில், கடந்த திங்கட்கிழமை (03) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த  மே மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவரை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்கள் வீடின்றி படும் துன்பங்களை நேரடியாகக் காண்பித்ததுடன் அம்மக்களுக்கான வீட்டுத்தேவை குறித்தும் சுட்டிக்காட்டினார். அமைச்சரின் வேண்டுகோளையடுத்து அமீரகத்தின் தூதுவர் வீடுகளைக் கட்டித்தர முன்வந்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை வீட்டுத்திட்டப் பணிகள் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான, அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்டன..

யுத்தத்தினால் வெளியேறி 25 வருடங்களாக அகதி வாழ்வை வாழ்ந்து மீண்டும் தமது சொந்தப் பகுதியில் மீள்குடியேறிய சுமார் 120 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

முல்லைத்தீவின் பல பகுதிகளில் காணிகள் அடையாளம் காணப்பட்டு 548  குடும்பங்களுக்கு காணிக்கச்சேரிகள் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை  அக்காணிகள் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை தொடக்கம், மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் வரை பல தடவைகள் இம்மக்களுக்கான வீட்டுத்தேவை குறித்து வலியுறுத்தியதுடன் காணிகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் ஒரு சிலரின் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகளின் அக்கறையின்மையாலும் அம்முயற்சிகள் தாமதமடைந்தது.

அதன் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கிணங்க தாபிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியூடாக, முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கான நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்றம், வீட்டுத்திட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *