Headlines

வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை




-ஆதில் அலி சப்ரி –

வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென்றும் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் வில்பத்து, சிலாவத்துர, மரிச்சுகட்டிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த நேரடி விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாகவும், விலத்திகுளம் பிரதேசத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

2012ஆம் ஆண்டு வர்த்தமானி பத்திரமொன்றின் மூலமே இம்மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறென்றே கூறவேண்டும். இந்த அழுகிப்போன காயத்தை குணப்படுத்துவதில் அரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நான் யாருக்கும் சேரு பூசுவதற்காக இதனை கூறவில்லை. வன பாதுகாப்பு, வன பரிபாலன திணைக்களங்கள் அடையாப்படுத்திய பிரதேசங்களிலேயே இவர்கள் குடியேரியுள்ளனர். இம்மக்களை இவ்விடத்திலிருந்து விரட்டிவிட முடியாது. மீள்குடியேற்ற அமைச்சு, சவூதி அரேபியா, கட்டார், குவைட் போன்ற நாடுகளின் பெருமளவிலான நிதியுதவிகள் மூலமே இவ்வீட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் முன்னர் பார்வையிட்ட பிரதேசங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை கண்டுகொண்டோம். விலத்திகுளம் பிரதேசத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் வன பாதுகாப்பு திணைக்களத்தால் குடியிருப்புகளுக்கு அனுமதியளித்திருக்கிறார்கள். முத்துராஜவெல போன்று பல சரணாலயங்கள் அழிக்கப்பட்டிருப்பதுபோன்று விலத்திகுளத்திலும் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. ஓசோன் படலம் மற்றும் சுற்றாடல் பாதிப்புகளுக்கு காடழிப்புகளே காரணமாகின்றது.

சிங்கராஜ வனத்திலும் பாரிய காடழிப்புகள் இடம்பெற்றுள்ளது. நாட்டில் காடழிப்புகள் இடம்பெறும் ஏனைய பிரதேசங்களையும்  பார்வையிட எதிர்பார்க்கிறோம்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *