Headlines

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் எம்.பி. பதவி பறிபோகும்




ஊழல் மோசடிகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர்களை விசாரிப்பதை தொடர்வதா? கைவிடுவதா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே     அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

  நாட்டை விடுதலை புலிகளுக்கு காட்டிக் கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தி ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்காகவே 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை சூழ்ச்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் மஹிந்த ராஜபக் ஷ உட்பட எமது கட்சியை சார்ந்த சில எம்.பி.மார் மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்ச்சிக்கார ஆர்ப்பாட்டத்தில் எமது கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கட்சியின் பிளவுக்கு துணைபோகக்கூடாது.

அத்தோடு கட்சி ஒழுக்கத்தையும் யாப்பையும் மீறி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால் தொடர்ந்தும் இவ்வாறான கட்சி ஒழுக்கத்தை மீறுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எனவே   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்.

அவ்வாறு நீக்கப்படுபவர்களின் எம்.பி. மற்றும் மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர் பதவிகளும் பறிபோகும். இது தொடர்பில் நீதிமன்றம் சென்றாலும் நிதித்துறையிலும் இதே நிலைதான் ஏற்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கட்சியும் இணைந்து தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாது.

2020 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை அமைப்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமாகும்.

இதனை நிறைவேற்றும் விதத்திலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. லிபிய ஜனாதிபதி  கடாபியுடனும் ஈராக்  ஜனாதிபதி சதாம் ஹுசைனுடனும் மக்கள் இருந்தார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் உயிரிழந்தனர். இன்றும் அந்நாடுகளில் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தான் மஹிந்த ராஜபக் ஷவுடன் உள்ளனர். ஆனால் அவர்கள் கட்சியை பிளவுபடுத்துவதற்கு துணை போகமாட்டார்கள். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்திலும் சுதந்திரக்கட்சி மத்திய குழுவில் 14 பேர் கட்சிக்கு எதிராக செயற்பட்டனர். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு வெளியேற்றினார்.

புதியவர்களை நியமித்து கட்சி பிளவுபடுவதை தடுத்து கட்சியை பாதுகாத்தார். இதேபோன்று சந்திரிகா காலத்திலும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தைரியமாக தீர்மானங்களை எடுத்து கட்சியை பாதுகாத்தார்.

இறுதியில் கட்சியை பிளவுபடுத்த முனைந்தவர்கள்  விலாசமில்லாமல் போயினர். இதேபோன்று இன்றும் கட்சிக்கு எதிராக செயற்படுவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை தைரியமாக எடுக்க வேண்டும்.

இதன்மூலம் கட்சியை பாதுகாக்க வேண்டும். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருந்து கொண்டு சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனையும் அதிகாரிகளின் வலையில் எம்மவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

நாட்டின் மீதும் கட்சியின் மீதும் உண்மையான அன்பு கொண்டவர்கள்  17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க வேண்டும். பஷில் ராஜபக் ஷ அரசியல் “டீல்” போடுவதில் வரலாற்றுப் புகழ்பெற்றவர்.

எனவே தற்போது அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது அவ்வாறானதொரு “டீல்” இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *