Headlines

இனி எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை




கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.  என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

இன்று தலை நகரில் இத்தகைய மத அடிப்படைவாதத்தை முன்னெடுத்து, அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள், அன்று பொதுபல சேனா முன்னெடுத்த கொள்கைகளையே, தாம் இன்று முன்னெடுக்கின்றோம் என்பதை உணர வேண்டும். சிங்கள மக்களே தேர்தலில் வாக்களிக்காமல் தோல்வியுற செய்த பொதுபல சேனாவுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் செயல் என்பதையும் உணர வேண்டும்.

அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் பெளசி, முஜிபூர் ரஹ்மான் எம்பி, மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, தேசிய நல்லாட்சி இயக்க தலைவர் நாஜா முஹம்மத் ஆகியோருடனும் உரையாடி உள்ளேன். அடிப்படைவாதத்துக்கு இடம் தரப்போவதில்லை என அவர்கள் எனக்கு உறுதி அளித்துள்ளார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *