Headlines

குடும்பத்தை கொலை செய்வோம் : 17 வயது சிறுமி துஸ்பிரயோகம்




குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த  22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து நேற்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான நபர் சிறுமியின் சகோதரியை அடித்ததுடன் சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தையே கொலை செய்வதாக மிரட்டி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்தி சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியை மறைத்து வைத்திருந்த  வீட்டிலிருந்து அச்சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர்.

மேலும் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *