Headlines

ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது – சோபித தேரர்




எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் வைத்து நேற்று சோபித தேரரரை சந்தித்தனர். இதன் போது அவர் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் யார் என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும்.  ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இன்றி பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்வதில் பயனில்லை.
45 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி முடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆளும் கட்சி ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டுமென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *