Headlines

மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!




மழை நீடித்தால் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மழை தொடர்ந்தும் பெய்தால் நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கண்டி, இரத்தினபுரி, கருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அரநாயக்க எலுங்குபிட்டிய மலைப் பகுதியில் நேற்று மீளவும் மண்சரிவு ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென அடையாளம் காணப்பட்டுள்ள மாத்தளை தொடங்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவர் என மாத்தளை பிரதேச செயலாளர் கே.பீ.எல்.பீ. மதுவந்தி தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் விடுத்த போதிலும் சிலர் அதனை கவனத்திற் கொள்ளாது தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில குடும்பங்களுக்கு வேறு இடங்களில் பொருத்தமான காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றையும் பெற்றுக் கொண்டு மீளவும் ஆபத்தான இடங்களில் தங்கியிருப்பதாகவும் அவர்களை விரைவில் அந்த இடங்களிலிருந்து வெளியேற்றப் போவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *